கிரீன் கார்டுக்காக காத்திருக்கும் 2.27 லட்சம் இந்தியர்கள்

அதிகபட்சமாக மெக்சிகோவைச் சேர்ந்த 15 லட்சம் பேர் இந்த கிரீன் கார்டை எதிர்பார்த்துள்ளனர். இந்தக் காத்திருப்போர் எண்ணிக்கை அடிப்படையில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.


அமெரிக்காவில் குடும்பத்தார் மூலம் பெறக்கூடிய கிரீன் கார்டு கிடைப்பதற்காக இரண்டு லட்சத்துக்கு மேற்பட்ட இந்தியர்கள் காத்திருக்கின்றனர்.


அமெரிக்காவில் மூன்று ஆண்டுகள் வரை பணி நிமித்தமாக தங்க விரும்பும் வெளிநாட்டினர் 'ஹெச்-1பி' விசா வாங்க வேண்டும். இந்த விசாவை இன்னும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கவும் வாய்ப்பு உண்டு. ஆனால், நிரந்தரமாக தங்கி பணியாற்ற விரும்பினால் 'கிரீன் கார்டு' பெறுவது அவசியம்.

ஹெச்1பி விசா பெறுவோரில் 7 சதவீதம் பேருக்குத்தான் கிரீன் கார்டு கிடைக்கிறது. அதுவும் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்ட தேதி அடிப்படையில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இதனால் கிரீன் கார்டுக்கு விண்ணப்பித்தவர்கள் பல ஆண்டுகளாக தங்கள் விண்ணப்பம் பரிசீலிக்கப்படும் எனக் காத்திருக்கிறார்கள்.


இந்தச் சூழலில் தற்போது அமெரிக்காவில் குடும்ப உறுப்பினர்கள் மூலம் கிடைக்கும் கிரீன் கார்டு அல்லது சட்டப்பூர்வ நிரந்தர குடியுரிமை பெற 2.27 லட்சம் இந்தியர்கள் காத்திருக்கின்றனர் என அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளிவிவரத்தில் தெரியவந்துள்ளது. இவர்களில் 1.81 லட்சம் பேர் நிரந்தரமாக அமெரிக்காவில் வசிப்பவர்களின் உடன்பிறந்தவர்கள்.

அமெரிக்கர்களைத் திருமணம் செய்தவர்கள் 42 ஆயிரம் பேரும் நிரந்தரமாக்க் குடியுரிமை பெற்றவர்களைத் திருமணம் செய்துகொண்டவர்கள் மற்றும் அவர்களின் குழந்தைகள் சுமார் 2500 பேரும் இதில் அடங்குகின்றனர்.